Tuesday, July 8, 2008

உரிமைக்காக.....

இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, வாங்கிக்கொண்டு சட்டைக் காலரை தூக்கிவிட்டபடி அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள். கைவசம் 10 லட்சம் ரூபாயும், 30 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களும் இருப்பதை மறைத்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் கலர் புகைப்படம் ஒன்று நாளைய பத்திரிகையில் வெளிவரும்.ஆனால் தலித் மக்களோ சுற்றிலும் நிகழும் பதற்றம் காரணமாக ஊரைவிட்டு வெளியேற முடியாமல் ஊருக்குள்ளே இருந்தபடி தோழர்களையும் கட்சி அலுவலகத்தையும் தொடர்புகொண்டு சதா பேசி தங்களுக்கான நம்பிக்கையை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய போராட்டக் களத்தில் கடைசி வரிசையில் நிற்கிற ஒருவனாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கான வாய்ப்போ மனநிலையோ ஏற்படுவதில்லை. ஆனால் ஊடகங்கள் மலையடிவாரவாசிகளுக்காக வடிக்கின்ற கண்ணீரும், அரங்கேற்றுகிற வஞ்சகமும் பொறுக்கமுடியாமல் எப்படியாவது இதை உடனடியாக எழுதவேண்டும் என்ற முடிவோடு எழுதுகிறேன்.உத்தப்புரம், அங்குள்ள தலித்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, அதற்கெதிரான போராட்டம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதிலிருந்து அவர்கள் பெற்ற படிப்பினை. இன்று புதுநம்பிக்கையோடு மீண்டும் எழுச்சிபெற்று அவர்கள் நடத்தும் போராட்டம் என அனைத்தையும் பற்றிய சிறு குறிப்பே இக்கட்டுரை.மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராம ஊராட்சி உத்தப்புரம். இங்கு வாழும் சமூகத்தினுடைய குடும்பங்களின் எண்ணிக்கை: கொடிக்கால் பிள்ளைமார்-450, பள்ளர்-650, கவுண்டர்-150, பறையர்-25, மூப்பர்-75, அருந்ததியர்-30, பிரமலைக்கள்ளர்-5, நாயக்கர்-30, ஆசாரி-3, வண்ணார்-20, மருத்துவர்-6, செட்டியார்-5, சைவப்பிள்ளைமார்-1. பிரதான அரசியல் கட்சிகள் அதிமுக, திமுக, புதிய தமிழகம், பாரதீய ஜனதாக்கட்சி.இக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அதன் பொருட்டு நிகழும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அந்த வாய்ப்பை சாதிக்கலவரமாக மாற்றும் ஆதிக்க சாதிகள் என பல்லாண்டுகளாக பிரச்சனைகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தபடி இருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் தலித்மக்கள் மீது நடந்த தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து நடந்த மோதல்கள் பற்றிய விபரங்களும் என் கைவசம் இல்லை. மக்களின் நினைவுப் பகுதியிலிருந்து மட்டுமே அதன் தன்மையை உணர முடிகிறது. ஆனால் 1989ல் நடந்ததைப் பற்றி விரிவாக எழுத முடியும்.1உத்தப்புரம் தலித் மக்கள் கும்பிடும் சாமி கருப்பசாமி. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கும்பிடும் சாமி முத்தாலம்மன். தலித்துகள் தங்களது சாமியான கருப்பசாமியை கும்பிடும் முன் தங்களின் முன்னோர்கள் நட்டு வைத்த அரசமரத்தைக் கும்பிட்டு மூன்று முறை சுற்றி வந்து பின்னர்தான் கருப்பசாமியை வணங்கச் செல்வது வழக்கம். அந்த அரசமரம் பிள்ளைமார்களின் கோவிலான முத்தாலம்மன் கோவிலுக்கு நேர் எதிரே சில பத்தடி தூரத்தில் உள்ளது. தலித் மக்கள் தங்களின் கோவிலுக்கு முன்னால் வந்து சாமி கும்பிட்டு, சாமியாடி கொட்டு கொட்டிச் செல்வதைப் பொறுக்கமுடியாமல், இந்த அரசமரத்திற்கு நீங்கள் வரக்கூடாது, வந்தால் அடி உதைதான் கிடைக்கும் என பிள்ளைமார்கள் களத்தில் இறங்கினர்.தலித் மக்கள் தங்களின் வழி வழி வந்த உரிமைக்காகப் போராடினர். போராட்டத்தின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமானது. இறுதியில் 1989ம் ஆண்டின் துவக்கத்தில் அது மோதலாக உருமாறியது. இந்த மோதலின் காரணமாக காவல்துறையால் 131 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானவர்கள் தலித்களே. ஆனால் மோதலுக்குப் பின் பிரச்சனைகளில் தலையிட்டு நியாயம் வழங்கவேண்டிய அரசு நிர்வாகம் சாதியை ஆடையாகவும் ஆன்மாகவும் கொண்டு செயல்பட்டதால், தலித்களின் உரிமைக்கான இந்த சிறு எதிர்ப்பை பொறுக்க முடியாமல் சுத்துப்பட்டு கிராமத்தில் இருந்த ஆதிக்கசாதிகளெல்லாம் தோள்தட்டிக்கொண்டு களத்திலே இறங்கின. தலித்களில் முக்கியமானவர்கள் எல்லாம் கைதான பின்னணியில் அதிகாரிகளும் ஆதிக்க சாதியினரும் சேர்ந்து தயாரித்த ஒப்பந்தம்தான் இன்றைக்கு “மகத்தான சாசனமாக” சாதி இந்துக்களாலும் சில அதிகாரிகளாலும் கொண்டாடப்படும் 1989ம் ஆண்டு ஒப்பந்தம்.இந்த ஒப்பந்த ஷரத்துகள் சொல்லும் உண்மை1. பரம்பரை பரம்பரையாக தலித்கள் சாமி கும்பிட்டு வந்த அரசமரத்தடியில் அவர்கள் பிரவேசிக்க எந்த பாத்தியதையும் இல்லையென அறிவித்தது. அதாவது எங்களது சாமிக்கு முன் நீயோ உனது சாமியோ வரவோ நிற்கவோ கூடாது என்ற சாதித் திமிர் சட்டமானது.2. தலித்களின் கோவிலான கருப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து அரசமரத்தை உள்ளடக்கி தலித்கள் பிரவேசிக்க முடியாதவண்ணம் சுவர் எழுப்பப்பட்டது. அதுவரை தலித்கள் தங்கள் குலதெய்வத்தை வணங்கச் சென்று கொண்டிருந்த பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.3. பிள்ளைமார் தரப்பில் யாராவது இறந்தால் சுடுகாட்டிற்குச் செல்ல வேறுபாதை இருந்தும் தலித் பகுதி வழியாக வந்து அந்த பாதையின் உரிமையை நிலைநாட்டி, நீ சாமி கும்பிட தோரணங்கள் கட்டியிருந்தாலும், எங்கள் சவம் வரும்பொழுது அதை எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் எங்களது சவம் தீட்டாகிவிடும் என்று தங்கள் சவத்தின் புணிதத்தை நிலைநாட்டியது.ஏறக்குறைய கிராமத்தின் பொதுப்பயன்பாட்டில் தலித்களுக்கு இருந்த அனைத்து பொது உரிமைகளையும் நிராகரித்து எழுதப்பட்ட ஒப்பந்தமானது முழுக்க முழுக்க ஆதிக்க சாதிகளின் கட்டப்பஞ்சாயத்து மூலமே உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தலித்கள் சார்பில் கையெழுத்திட்ட 5 பேரில் மூவர் இறந்துவிட்டனர். ஒருவர் மிகவும் வயோதிக நிலையில் உள்ளார். மீதமிருக்கும் ஒருவர்தான் இப்பொழுது தலித் மக்களின் ஊர்ப்பெரியவராக இருக்கிற கே.பொன்னையா. இவரிடம் ஒப்பந்தம் பற்றி கேட்டபொழுது “எங்கள் ஐந்துபேரையும் தூக்கிக்கொண்டு போய் சினிமா தியேட்டர்ல வெச்சு, கையெழுத்து போடாவிட்டால் இங்கிருந்து உயிரோடு போகமுடியாது என மிரட்டி கையெழுத்து வாங்கினர். சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்கள் எல்லாம் கூடியிருந்த சபையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார்.இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்தார்கள் என்று 23 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அதில் 22 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும்தான் தலித் (எண்:15 இளையசாமி S/o சமையன், மல்லப்புரம்). இவர் காங்கிரஸ் கட்சியின் அந்தப் பகுதியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் தலைவர். அவர்களுடனேயே எப்போதும் அனுசரணையாக இருப்பவர். எனவே அவர் அந்த கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பஞ்சாயத்தார்களிடம் இதைத் தவிர தலித்களுக்கு வேறென்ன தீர்ப்பு கிடைத்திருக்கும்? தங்களது சாதி ஆதிக்கத்தையே தீர்ப்பென எழுதி தலித்களிடம் அவர்கள் கையெழுத்தைப் பெற்றனர்.தீர்ப்புரையின் கடைசியில் “இந்த ஒப்பந்தத்தின் நகல்களை இரு தரப்பினரும் வைத்துக் கொள்வதென்றும், மூலப்பத்திரம் போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்” எழுதப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதை உருவாக்கியதில் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் பங்கு என்ன? என்று விசாரித்தபொழுது உண்மையான முடிச்சு அவிழ்ந்தது. மாவட்டத்தின் உயர் அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் இந்த ஒப்பந்த ஷரத்துகள் உருவாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர்தான் தியேட்டரில் நாட்டுக்கூட்டம் போட்டு தலித்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும், இந்த முழு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இன்று பணி ஒய்வில் இருக்கிற அரசு ஊழியர் ஒருவர் தனது சங்க உணர்வின் மிச்சமிருக்கும் கடமைகளில் ஒன்றெனக் கருதி இப்பொழுது சொல்லித் தொலைத்தார்.தலித்களின் பயன்பாட்டு உரிமைகள் அனைத்தையும் மறுத்து உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தலித்கள் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுவரை அரசமரத்தை ஒட்டி பஸ் நிறுத்தம் இருந்தது. அது அங்கேயே இருக்குமானால் பஸ்சை விட்டும் இறங்கும் தலித்கள் அரசமரப் பகுதிக்கு வர நேரிடும். இது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்பதால் அரசமரத்து பஸ் நிறுத்தம் ஒரு பர்லாங் தூரத்திற்கு தள்ளிக் கொண்டு போகப்பட்டது. இந்நிலையில் 2.8.89ம் ஆண்டு புது பஸ் டிரைவர் ஒருவர் பழைய இடத்தில் பஸ்சை நிறுத்தியதும் உள்ளே இருந்த தலித் ஒருவர் இறங்கி நடக்க அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைமார்கள் அந்த தலித்தின் மீது கல்வீசி தாக்குதலைத் தொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து மோதல் உருவானது. இத்தோடு இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று சுத்துப்பட்டு கிராமத்தின் ஆதிக்க சக்திகள் எல்லாம் உத்தப்புரம் தலித்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். பெரும் மோதலில் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலித்கள் கொல்லப்பட்டனர். மூன்று தலித் பெண்கள் படுகாயமடைந்தனர். பெரும் அழிவும் தீ வைப்பும் நடந்து முடிந்தது. தங்களது உரிமையை மறுத்துப் போடப்பட்ட ஒப்பந்தம், அதை மீற முயன்றால் பெரும் பொருட்சேதம் என தலித்கள் துயரத்தின் பாதளத்திற்குத் தள்ளப்பட்டனர்.இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் தலித்களின் அரசமர வழிபாட்டு உரிமையையும் கோவிலுக்கு செல்லும் பாதையையும் மறித்து சுவர் எழுப்பியவர்கள் இப்பொழுது தலித்கள் நடந்து செல்லும் மூன்று பொதுப் பாதைகளை அடைத்து சுமார் 600 மீட்டருக்கு பெரும் தடுப்புச் சுவரை எழுப்பினர். எங்கள் பகுதியில் உன் காலடி கூட படக்கூடாது என தலித்களை துண்டாக்கினர். அவர்களின் கருத்தை அப்படியே ஏற்ற அரசு, பொதுத்தண்ணீர் தொட்டியிலிருந்து பிரித்து தலித்களுக்கு தனித் தண்ணீர் தொட்டி அமைத்தது. ஊர்ப் பொது பள்ளிக்கூடத்திலிருந்து தலித் மாணவர்களுக்கென்று தனியாக பிரித்து ஒரு தலித் பள்ளிக்கூடத்தை அமைத்தது. பால்வாடியை தனியாக்கியது. ரேசன்கடையைப் பிரித்தது. இவைகளை எல்லாம் ஏற்க முடியாது என்று சொல்லவோ, புகார் செய்யவோ தலித்களுக்கு நாதியில்லை. ஏனென்றால் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பிள்ளைமார் ஒருவரின் வீட்டிலே இருந்தது. அந்தத் தெருவில் தலித்கள் அதுவரை நடந்ததே இல்லை.இந்தப் பெரும் கலவரம், அதனால் ஏற்பட்ட இழப்புகள், இந்த கலவரத்தைத் தொடர்ந்து அரசு அப்பட்டமாக எடுத்த சாதி இந்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, இவையனைத்தும் தலித்களை மீடேற முடியா நிலைக்குத் தள்ளியது. வழிபாட்டு உரிமையை 89ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பெயரைச் சொல்லி உருவாக்கப்பட்ட சுவர் அடைத்து நின்றது. பொதுப்பாதையை 4 தலித்களைப் பலியெடுத்த வெற்றியின் பெயரால் ஆதிக்கசாதிகளால் கட்டியெழுப்பப்பட்ட நெடுஞ்சுவர் மறைத்து நின்றது. தலித்களின் குழந்தைகள் மட்டுமே படிக்க பள்ளி உருவாக்கப்பட்டு விட்டது. பிற சாதிக்காரனுக்கு பக்கத்தில் உட்காராமல், அவனைத் தொடாமல், அவனோடு பேசாமல், அவனோடு உணவையோ, உணர்வையோ பகிர்ந்து கொள்ளாமலே உத்தப்புரம் தலித் குழந்தைகள் கடந்த 19 ஆண்டுகளாக பள்ளிப்படிப்பை முடித்து சாதீயத்தின் அருவருப்பு மிக்க துண்டாடலை பள்ளிக்கூடத்தின் வழியிலேயே அனுபவித்து வெளியேறுகின்றனர்.2மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 பிப்ரவரி 9ம் தேதியன்று 47 மையங்களில் கள ஆய்வு நடத்தியது. எந்தெந்த வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிப்.22ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஆய்வின் விவரங்கள் வெளியிடப்பட்டது. மார்ச் 25ம் தேதி பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக வெளியுலகின் பார்வைக்கு தெரியாமல் இருந்த உத்தப்புரம் “தீண்டாமைச்சுவர்” இந்த கள ஆய்வில் தான் தெரியவந்தது. அதன்பின் ஓரிரு ஊடகங்கள் அதன்மீது கவனம் கொள்ளத் துவங்கின. ஏப்.17ம் தேதி அந்த சுவற்றின் மீது மின்சார வேலி அமைக்கப்பட்டதாக இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. அன்றே மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். உடனே மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அந்த மின்வேலியை ஒரு பர்லாங் தூரத்திற்கு அப்புறப்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.அது ஏதோ, வயரிங் சம்பந்தப்பட்ட பிரச்சனைபோல அரசு சட்டமன்றத்தில் பதில் சொன்னது. அந்த மின்வேலி அமைக்கப்பட்டது உண்மையா? அப்படியென்றால் யாரால், ஏன் அமைக்கப்பட்டது? அப்படியொரு தடுப்புச்சுவர் எதனால் இருக்கிறது? அதை ஏன் தாண்ட வேண்டுமென்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். தாண்டவே விடக்கூடாது என்று ஒரு பகுதியினர் ஏன் துடிக்கின்றனர் என்பதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேலியைத் தூக்கி வெளியில் போடு என்பதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது.ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கியது. மறுநாள் ஏப்.19 அன்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக சுவர் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் பலனேதும் இல்லை. ஏப்.29ம் தேதி பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாயிரம் பேர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உடனடியாக சுவரை இடி.. அல்லது நாங்கள் இடிப்போம் என்று முழங்கியது. அதுவும் மாவட்ட நிர்வாகத்தின் காதிலே விழவில்லை. பின்னர் தீண்டாமைச் சுவரை பார்த்து காறி உமிழ மே 7ம் தேதி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத் வருகிறார் என ஏப்.30ம் தேதி அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பு சென்னையிலே இருக்கிற தலைமைச் செயலகத்திற்கு கேட்டதன் விளைவு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் காதிலும் விழுந்தது. வேறு வழியேயில்லாமல் மே 2ம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதாவது பிரச்சனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு 67 நாட்களுக்குப் பிறகுதான் அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது. பேச்சுவார்த்தை மே 2 மற்றும் 4 ஆகிய இரு தேதிகளில் மட்டுமே நடந்தது. அதுவும் கோட்டாட்சியர்தான் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அதில் உட்காரவில்லை. அவருக்கு “நிறைய்ய்ய......” பணிகள் இருந்தன.இறுதியாக பிரகாஷ்காரத் வருவதற்கு முன் “ஏதாவது செய்” என்ற மேலிட உத்தரவிற்குப் பணிந்து மே 5ம் தேதி உத்தப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் எழுந்தருளினார். கையில் பலவகையான வரைபடத்தை வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி சுற்றி வந்தார். ஊர் இரண்டாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதை சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டுமென்று நடுவீதியில் நின்று தீவிரமாக யோசித்தார். பல போஸில் அவரது புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியானது. இறுதியில் மே 6 அன்று காலை சுமார் 7.45 மணியளவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பஞ்சாத்தார்களால் முடிவு செய்யப்பட்டு, சாதிவெறியர்களால் சட்டத்திற்கு எதிராக கட்டப்பட்ட 600 மீட்டர் சுவரில் 4 மீட்டர் அகலம் கொண்ட ஒரு இடத்தைத் தேர்வுசெய்து (அவர்கள் தேர்வு செய்த இடத்தில் சுவரின் உயரம் 3 அடி மட்டும்தான். மீத உயரம் சில ஆண்டுகளுக்கு முன் தானாகவே இடிந்துவிட்டது.) (எழுச்சியுடன் உத்தப்புரம் தலித் மக்கள்)சுமார் 1600 போலீசார் பாதுகாத்து நிற்க அந்த சின்னஞ்சிறு கிராமத்தின் சின்னஞ்சிறு சுவற்றின் 16 உடை கற்களை பெயர்த்து எடுத்தது அரசு. ஒரு கல்லுக்கு 100 போலீசார் வீதம் 1600 போலீசாரும் சாலையெங்கும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சுவற்றின் ஒருபுறம் பிள்ளைமார்களின் பயன்பாட்டில் இருந்த சிமெண்ட் சாலை, சுவற்றின் மறுபுறம் தலித்கள் குடியிருக்கும் பகுதி - இரண்டையும் இணைத்து 50 மீட்டர் நீளத்திற்கு செம்மண் கொட்டி சாலையமைக்கப்பட்டது.மறுநாள் பிரகாஷ்காரத் வந்தது உத்தப்புரத்து தீண்டாமைக் கொடுமையையும் அதற்கெதிரான போராட்டத்தையும் உலகறியச் செய்தது. இந்தச் சின்னஞ்சிறிய சுவர் உடைப்புக்கு எதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என பேசியவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்ததைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். எடுக்கப்பட்ட 16 கற்களின் வலிமை அதன்பின் தான் உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.302 ரேசன் கார்டுகளை தூக்கியெறிந்துவிட்டு “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...” என்று கத்திக் கொண்டே ஊரைவிட்டு வெளியேறி தாழையூத்து மலையடிவாரத்திற்கு ஓடின 200 குடும்பங்கள். வடக்குத்தெரு மொத்தமும் காலியானது. அவர்களின் கதறல் ஒரே நாளில் எட்டுத்திக்கும் கேட்டது. 19 ஆண்டுகளாக தொண்டை கிழிய, நரம்பு விடைக்க கத்தியும் யார் காதுக்கும் கேட்காமலிருக்க இது அடக்கப்பட்ட சாதியின் குரலல்ல. இது ஆதிக்கசாதியின் குரல். அதற்கேயுரிய வலிமையோடு அது எதிரொலித்தது.எங்கெங்கிருந்தெல்லாமோ ஆதரவு சக்திகள் திரண்டுவந்தனர். ஆதரிக்க வேண்டிய தலித் தலைவர்களே எதிர்த்து அறிக்கைவிட இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆண்டப் பரம்பரைகளின் குரல். எனவே எட்டுத்திக்கும் ஆதரவு பெருகி வந்தது. ஆட்சியர் அலுவலகம் கிடுகிடுத்தது. காரை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டார் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு தேசிய நெடுஞ்சாலையில், அங்கிருந்து உத்தப்புரத்திற்கு வழிநெடுக நிறுத்தப்பட்ட போலீசின் நடுவே, மாவட்ட மற்றும் ஊரக நெடுஞ்சாலையில், அங்கிருந்து மெட்டல் சாலை கூட இல்லாத மோசமான குண்டும் குழியுமான பகுதியில் ஒரு கிலோமீட்டர், பின் அங்கிருந்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையென நடந்தே ஒன்றரை கிலோமீட்டர் வியர்த்து விறுவிறுக்க மலையடிவாரம் வந்துநின்றார்.67 நாள் காட்டுக்கத்து கத்தியும் வராமலிருக்க இது ஒன்றும் அடக்கப்பட்ட தலித்களின் குரலல்ல. ஆதிக்கசாதியின் குரல். எனவே அவரே வந்தார். 6 மணி நேரத்திற்குள் வந்தார். காடு மலை கடந்து நடந்தே வந்தார். அவர்கள் இருக்குமிடம் தேடிவந்தார். யார் வந்தாலும் அவர்கள் கத்துவதை நிறுத்தவில்லை. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை...”என்று கத்திக்கொண்டேயிருந்தனர். 16 உடைகற்களை எடுத்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மைதான் என்ன? என்று கேட்க முதுகெலும்புள்ள யாரும் அங்கு செல்லாததால் அவர்கள் கத்திக்கொண்டேயிருந்தனர்.ஊடகப்புலிகள் கேமிராக்களை தூக்கிக்கொண்டு ஓடியபடியே இருந்தனர். மூன்று குழந்தைக்கு அம்மை விளையாண்டு விட்டது. இரண்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கானது. பொது சுகாதாரம் கெட்டுப்போய் கிடக்கிறது என்று ஆளாளுக்கு நீலிக்கண்ணீர் வடித்தனர். ஊரின் மொத்த சாக்கடை தலித்களின் வீடுகளுக்கு நடுவேதான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த சாக்கடைக்கு மூடிபோடு என்று கோரிக்கை வைத்துப் போராடும் தலித்களைப் பற்றி 7ம் தேதிக்குப்பின் ஒரு பத்திரிகைகூட படத்தையோ, செய்தியையோ (தீக்கதிர் தவிர) வெளியிடவில்லை. ஆனால் மலையடிவார விரும்பிகளின் ஒரு நூறு புகைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கிறது. ஊடகங்களின் சாதி மற்றும் சனநாயகப்பற்றுக்கு இதைவிட இன்னொரு எடுத்துக்காட்டு தேவையில்லை.19 ஆண்டுகளுக்குப்பின் 16 கற்களை எடுத்ததால் ஏற்பட்ட பதற்றம் தணிக்க அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறது. “எங்களுக்கு பாதுகாப்பில்லை... பாதுகாப்பில்லை...”என்று கத்தியவர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை திட்டமிட்டுச் செய்தார்கள்.மே 7 அன்று காரத் வந்து சென்றபின் மே 8ம் தேதி பக்கத்து கிராமமான கோடாங்கி நாயக்கன்பட்டியிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலையை விஷமிகள் அவமரியாதை செய்தனர். அதிகாலையிலேயே செய்தி பரவத் தொடங்கி பதற்றம் உருவானது. உசிலம்பட்டி பகுதியெங்கும் பஸ்கள் ஓடவில்லை. கடையடைப்பு, கல்வீச்சு, மறியல் என சொல்லிவைத்த சூத்திரத்தை சம்பந்தப்பட்டவர்கள் அரங்கேற்றி முடித்தனர். பிள்ளைமார்களுக்கு எதிராக தலித்கள், தேவர்களுக்கு எதிராக தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் என்றுகாட்ட ஒரே நேரத்தில் எல்லாக் காய்களும் நகர்ந்தன. உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவான போராட்டமும், தேவர் சிலை அவமதிப்புக்கு எதிரான போராட்டமும் தினமும் ஒவ்வொரு பக்கமாக மாறி மாறி சங்கிலித் தொடர்போல் பின்னியபடி நடத்தப்பட்டது.மதவெறியர்களும் சாதிவெறியர்களும் ஒன்று சேர்ந்தனர். 89 கலவரத்தில் உத்தப்புரம் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கோடாங்கிநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, ராஜக்காபட்டி, மானூத்து ஆகிய கிராமங்களில் உள்ள ஆதிக்க சக்திகள் இப்பொழுது மீண்டும் களத்திலே இறங்கியுள்ளன. பசும்பொன் தேவரின் சிலை அவமதிக்கப்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டியில் வசிக்கும் தலித் குடும்பத்தின் எண்ணிக்கை-1, தேவர் குடும்பத்தின் எண்ணிக்கை-200. இந்த ஒரு புள்ளிவிபரம் போதும் உண்மையை விளக்க. இதற்குமேல் எத்தனை பக்கம் எழுதினாலும் அது உபரித்தகவல்தான்.அன்றிரவு தேவர்சிலைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது என்ன நடவடிக்கை? காலையில் விஷயம் தெரிந்ததும் வெறிபிடித்தது போல் பஸ்சை உடை, மறியல் செய் என்று போலீசார் கத்தவேண்டிய காரணமென்ன? சிலையை மோப்பம் பிடிக்க போலீசின் மோப்பநாய் வருகிறது எனத் தெரிந்தவுடன் அவசர அவசரமாக சிலையை கழுவிய இரண்டுபேரின் பெயரைச் சொல்லியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்? அவர்கள் ஒரு கட்சியின் தலைவர்கள் என்பதாலா? எதிரிக்கு சாதகமாகி விடக்கூடாது என்று சொல்பவர்களின் பதிலை நாம் மௌனமாகக் கேட்கிறோம். இதில் யார் எதிரிகள் என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.சாதக பாதக கணக்குகளை போட்டபடி சில அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. மலையடிவார விரும்பிகளுக்கு தேவையான பொருளும் ஆதரவும் வந்த குவிந்தபடி இருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் வளைந்து, குழைந்து, பணிந்து என்ன வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து மிகக்கடினமான வனவாசத்தை விட்டிறங்கி நீங்கள் கட்டிய வீட்டில் நீங்களே வந்து குடியேறி எங்கள் ஆட்சிக்கு பெருமை சேருங்கள் எனத் தவமாய் தவமிருக்கிறது. அவர்கள் மலையின் மீதிருந்து பேச ஆரம்பித்தார்கள். ஜனநாயகம், சமத்துவம், சட்டம் அனைத்தையும் புதைத்த புதைகுழியின் மீது நின்று அரசும் அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.மே 6ம் தேதி திறக்கப்பட்ட பாதையின் வழியே தலித்கள் நடக்கலாம். ஆனால் ‘பிணங்களைத் தூக்கி வரக்கூடாதென்று’ நடந்தே தங்கள் இருப்பிடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கலெக்டரிடம் முதல்நாள் கோரிக்கை வைத்தவர்கள், மூன்றாம் நாள் ‘திறக்கப்பட்ட பாதையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக சுத்துப்பட்டு கிராமப் பெரியவர்களை கேட்டு எடுக்கிற முடிவை தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்க வேண்டும்’ என்ற அளவிற்குப் போயுள்ளனர். தலித்களின் வழிபாட்டு உரிமையை மறுத்துக் கட்டப்பட்ட சுவரை அகற்றாமல் அது உள்ளிட்ட தங்களது கோவில் பகுதி முழுவதுக்கும் பட்டா வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இவையனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எவ்வித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுக்கிறது. “சட்டத்தின் ஆட்சி” என்று சொல்வதை விட அயோக்கியத்தனமான வார்த்தை வேறெதுவும் இருக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.3உத்தப்புரம் தலித்களுக்கு எதிரான அனைத்துக் கொடுமைகளும் மீண்டும் மீண்டும் அரங்கேறியபடியே இருப்பதற்கு பிரதான குற்றவாளியாக பொறுப்பேற்க வேண்டியது மாநில அரசே.அ. அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய அரசு அதற்கு நேர் எதிராக கட்டப்பஞ்சாயத்து மூலம் 1989ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதம் என்று பார்க்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை உருவாக்க அதுவே காரணமாக இருந்தது. ஒப்பந்தத்தின் மூலப்பத்திரத்தை போலீஸ் ஸ்டேசனில் வைத்து 19ஆண்டுகளாக அதுவே பாதுகாத்து வந்துள்ளது.இப்பொழுது கூட அது சட்ட விரோதமான ஒப்பந்தம் என்று சொல்வதற்கு அரசு தயாராக இல்லை. பேச்சுவார்த்தையின் பொழுது “உங்க அப்பங்கெ போட்ட கையெழுத்துக்கு நீங்கதான் பொறுப்பு” என்று வெளிப்படையாக அரசு அதிகாரிகள் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஊர் மந்தையில் சாதித் திமிரோடு உட்கார்ந்து பேசுகிறவனுக்கும் இவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் கூடுதலாக அதிகாரி என்ற திமிரும் சேர்ந்திருப்பது மட்டும்தான்.ஆ. 1989 ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு பின் பிள்ளைமார் நெடுஞ்சுவர் எழுப்பி தலித்களைத் துண்டாக்கி, தாழ்த்தப்பட்டவர்களின் பாதச்சுவடு கூட படாத புனிதபூமியாக தங்களின் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டார்கள். அதன்பின் அரசும் புனிதத்திற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்க ஆரம்பித்தது. தண்ணீர் தொட்டி, ரேசன்கடை, பால்வாடி என அனைத்தையும் பிரித்தது. இறுதியில் பள்ளிக்கூடத்தையும் பிரித்தது. உத்தப்புரம் அரசுப்பள்ளி 1, அரசுப்பள்ளி 2 என்றானது.“உத்தப்புரம் அரசு நடுநிலைப்பள்ளி 1”-ல் இந்த ஆண்டு 250 மாணவர்கள் படிக்கின்றனர். 1989க்குப் பின் இந்த ஆண்டு வரை ஒரு தலித் மாணவன் கூட இந்தப் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. சுமார் 19 ஆண்டுகளாக தலித் மாணவர்களோடு சேர்ந்து உட்காராத, பேசாத, பழகாத, நாமெல்லாம் பேசிப் பழக எந்தத் தகுதியுமற்ற இழி பிறவிகள் இந்த சுவற்றுக்கு அப்பால் இருக்கிறார்கள் என்ற அருவருக்கத்தக்க மனப்பதிவைத்தான் இந்தப் பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனிப்பந்தி வைப்பதை ஏற்க முடியாது எனப்போராடி அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த தந்தை பெரியாரின் வாரிசுகள் அதற்குப்பின் முக்கால் நூற்றாண்டு கழித்து தங்களது ஆட்சியில் அரசாங்கச் செலவில் பள்ளிக்கூடம் கட்டி, ஆசிரியருக்கு சம்பளம் கொடுத்து தலித் மாணவர்களுக்கு தனிப்பந்தியல்ல, தனிப்பள்ளிக்கூடத்தையே நடத்தி வருகின்றனர்.இ. அன்றிலிருந்து இன்றுவரை உத்தப்புரம் தலித்கள் மீது பிள்ளைமார் சமூகத்தினர் நடத்திவரும் தாக்குதல்களும், உளரீதியான வன்முறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில.1) பஞ்சாயத்து தலைவர் பதவி கடந்த பத்தாண்டுகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை பொதுப் பிரிவானது. அப்படி மாறிய பின்பும் தலித்களை கும்பிட்டு ஓட்டுக் கேட்க வேண்டுமென்பதற்காக பிள்ளைமார் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை.2) கடந்த காலத்தில் பிள்ளைமார்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து நாற்காலியில் உட்கார்ந்து பேசியதில்லை.3) கடந்த 15 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் தலித்கள் யாரும் இதுவரை பிள்ளைமார் தெருவில் நுழைந்து ஓட்டுக் கேட்க அனுமதிக்கப்பட்டதில்லை. ஊர் முக்கிலிருந்து கும்பிட்டு ஓட்டு கேட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.4) இப்போது வார்டு உறுப்பினராக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்கு வரும்போது டீயோ, காபியோ குடிப்பதில்லை.5) இப்போது பஞ்சாயத்து கிளார்க்காக இருக்கிற தலித் வரி வாங்கக்கூட அவர்கள் பக்கம் போக முடியவில்லை. ஆனால் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிற பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் கலெக்டரை விட அதிகாரத்துடன் இருப்பதாக எல்லோரும் சொல்கின்றனர்.6) இவ்வளவு ஏன், இப்பொழுது மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு புகைப்படங்கள் எடுக்கும் வேலைகள் முடிந்துள்ளது. அதில் ஒருவர் கூட பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அங்கு இருப்பவர்கள் கூலி வேலை செய்ய தேவையே இல்லாத அளவு பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் இல்லை. பாதிப்பேருக்கு மேல் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. அப்படியிருந்தும் பெயரை யாரும் கொடுக்கவில்லை. காரணம் தலித் வெட்டிப்போடும் மண்ணை தான் சுமப்பதா? தான் வெட்டியெடுக்கும் மண்ணை தலித் தொடுவதா? அவனும் நானும் சேர்ந்து வேலை பார்ப்பதா? என்ற தீண்டாமையின் உச்ச வெளிப்பாடுதான் இந்த புள்ளி விபரம்.இன்னும் வண்டி வண்டியாக சொல்லிக் கொண்டே போகலாம். இன்று இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் அனுபவித்த கொடுமையை கேட்கக்கூட அருகதையற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுத முடியாமல் செய்கிறது. இவ்வளவையும் எழுதுவதற்குக் காரணம் அரசு எந்திரம் நாளையே மனம் திருந்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அல்ல. இப்போது இதையெல்லாம் சொல்லாமல் எப்பொழுதுதான் கேட்க வேண்டிய காதுகளுக்கு இந்தத் துயரத்தின் வலி கேட்கும் என்ற நம்பிக்கைதான்.4“இதையெல்லாம் எழுதினாயே, நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காமல் இருக்க நியாயம் இல்லை. எனவே அவர்களின் செயல்களைப் பற்றி எழுதுகிறேன் சுருக்கமாகச் சொல்லப் போனால் ‘எப்பொழும் போல் நடந்து கொண்டார்கள்.’விரிவாகச் சொல்வதாக இருந்தால், உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் தோழர்.நன்மாறன் எழுப்பிய பொழுது படு வேகமாக பதில் சொன்ன சேடப்பட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் துரைராஜ், அம்மாவின் கட்டளைக்கிணங்க அன்றே களமிறங்கினார். பிள்ளைமார்களின் பிரச்சனையை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த பிரச்சனையாக மாற்றிய சூத்திரதாரியாக அவர் செயல்பட்டார். அவர் எதிர்பார்த்தது போல தலித்களுக்கு எதிரான கூட்டு வெகு சீக்கிரமே கைகூடியது. பேரையூரில் பிள்ளைமார்களுக்கு ஆதரவாக அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையேற்று நடத்திய போராட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் அணிவகுத்து நின்றனர். சாதிக்கு முன்னால் திமுகவாவது, அதிமுகவாவது எல்லாவற்றையும் கழற்றி எறி என்று நாலு திக்கும் எறிந்தனர். கோபாலபுரத்திலும், போயஸ் தோட்டத்திலும் கழன்ற துணிகள் போய் விழுந்தன. அவர்களுக்கும் இது ஒன்றும் புதிதல்ல.அதிமுகவுக்கு அடுத்தபடியாக இந்துப் போர்வை போர்த்தி நடித்துக் கொண்டிருந்த பாரதீய ஜனதா தாழையூத்து மலையடிவாரத்தில் தலித்களுக்கு எதிரான கோரப்பற்களோடு இரத்த வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறது. “சாதி இருக்கிறது என்பதை விட ராணுவம் வருகிறது என்பது அவமானமல்ல” என்று சட்டமன்றத்தில் திமுக தலைவர் கம்பீரமாக அறிவித்த இரண்டாம் நாள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சாதி இருக்கிறது என்ற மகத்தான உண்மை வானத்துக்கும் பூமிக்குமாக எழுந்து நின்றது. அதன் மெய்க்கீர்த்தியை வணங்கி, அதன் ரூப வடிவமான மலையடிவார விரும்பிகளை சமாதானப்படுத்தி அழைத்துவர தனது பிள்ளைமார் அணியை அனுப்பி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.மதுரை மேயரின் கணவர் கோபிநாதன் தலைமையில் பெரும்படை காடு நோக்கி புறப்பட்டது. “நம்ம சாதிக்காரங்களா...” என்று அலறியபடி அவர்கள் காட்டுக்குள் ஓடினர். சாதிப் பெருமைகளையும், கலைஞரின் பிள்ளைமார் கரிசனங்களைப் பற்றி மணிக்கணக்கில் எடுத்துக் கூறினர். அவர்களோ மசிவதாக இல்லை. ஆனாலும் அணி அணியாக அடலேறுகள் போய்க் கொண்டேயிருக்கின்றன.இத்தனை ஆண்டுகாலம் எத்தனை வடிவங்களில் தீண்டாமை உண்டோ அத்தனை வடிவங்களிலும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிற உத்தப்புரத்தில் உண்மையில் தீண்டாமை இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உண்மையறியும் குழுவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியிருக்கிறதாம். இந்த உண்மையை அறிய இன்னும் எத்தனை காலம் எடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை. நேற்றைய தினம் மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசவந்த தோழர் தா.பாண்டியன். உத்தப்புரத்திற்கு ஒரு எட்டு போய் வந்திருக்கலாம் உண்மையை கண்டறிய அல்லது அவரது சொந்த ஊரான வெள்ளமலைப்பட்டியில் குடியிருக்கும் ஒரு தலித்திடமோ அல்லது ஒரு பிரமலைக்கள்ளரிடமோ போன் போட்டு இரண்டு நிமிடம் பேசியிருக்கலாம். அவருக்குத் தேவையான உண்மை கிடைத்திருக்கும். சரி எப்படியோ அவர்கள் உண்மையை கண்டறிந்து வரட்டும். இடதுசாரி ஒற்றுமைக்காக நாம் காத்திருப்போம்.இப்படியாக சோகக் காட்சியும் காமெடிக் காட்சியும் மாறி மாறி வந்துபோக கடைசியில் தலித் கட்சிகளின் தலைவர்கள் கிளைமாக்ஸ் காட்சிக்காக வந்து நின்றார்கள். தோழர் நன்மாறன் உத்தப்புரம் பிரச்சனையை சட்டமன்றத்தில் கிளப்பிய பொழுது விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை “அரசியல் லாபத்திற்காக ஒரு கட்சி இந்தப் பிரச்சனையை எடுக்கிறது” என்றார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கூறியிருப்பதுபோல, “பொருளாதார லாபத்திற்காக என்றால் அவர் ஆதரித்திருப்பாரோ என்னவோ”.அடுத்த ஒரு வாரத்தில் பிரச்சனை பெரிதாகி பிரகாஷ்காரத் வருவது வரை நீண்டு சென்றவுடன் மே 6ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காரத் வருவதற்கு முதல்நாள் சுவர் இடிக்கப்பட்டவுடன் மே 7ம் தேதி மாலை மற்றும் 8,9 ஆகிய மூன்று தேதிகளிலும் பேரையூர், எழுமலை இரு நகரங்களிலும் கதவடைப்பு, மறியல், காவல்நிலைய முற்றுகை என தினமும் நடந்து வந்தது. மறு நாள் 10ம் தேதி பேரையூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் “சமூக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இப்பகுதிக்கு வருவதில் பெருமைப்படுகிறேன்” (மறு நாள் மே 11 பேரையூரில் முழு அடைப்பைத்தான் முன்கூட்டியே பேசினாரோ என்னவோ?) என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, நானோ எனது கட்சியோ ஒரு போதும் சாதிக் கலவரத்தை தூண்டியதில்லை எனச்சொல்லி சுமார் ஒரு மணிநேரம் விளக்கவுரையாற்றினார். ஆனால் உத்தப்புரம் பிரச்சனையை பற்றி அவர் வாயே திறக்கவில்லை. அதுவெல்லாம் சாதிக்கலவரத்தை தூண்டுபவர்களின் செயல் என்று ஆதிக்க சாதிகள் சொல்லும் அதே வார்த்தையை அவரும் சொல்லிவிட்டுச் சென்றார்.கூட்டத்திற்கு ஒருவரை அனுப்பி செல்போனை ஆன் செய்ய வைத்து உத்தப்புரத்திலிருந்து அவரது முழுப்பேச்சையும் கேட்டுக் கொண்டேயிருந்த இளைஞர்கள் அவர் பேசிமுடித்ததும் சொன்ன வார்த்தையை எழுத முடியாவிட்டாலும் அவரால் எளிதில் யூகிக்க முடியும்..“தென் தமிழகத்தில் சாதீய மோதல்களை உருவாக்கவும் அதில் தாழ்த்தப்பட்ட மக்களை பலிகடா ஆக்கவும் தொடர்ந்து சாதிய சகதிக்குள் சிக்க வைக்கவும் அதன் மூலம் நிரந்தரமாக அவர்களை தனிமைப்படுத்தவும், சில சுயநல அரசியல் சக்திகள் செய்யும் சதியாகும்” என்று உத்தப்புரம் பிரச்சனையைப் பற்றி கோபத்தோடு அறிக்கை விட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி. பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது இயக்கத்தின் மதுரை மாவட்டத் தளமாக விளங்கிய உத்தப்புரத்தில் அவரது கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதால் கோபப்பட்டு இப்படி அறிக்கை விட்டுள்ளார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கொடியை பிடுங்கியது உத்தப்புரம் தலித்துகள் அல்ல, அவர்தான் என்பதை அவரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நமக்குத் தெரியவில்லை.இறுதியாக உத்தப்புரம் தலித்கள் 89ம் ஆண்டு உரிமைக்காக குரல் கொடுத்தபோது பிள்ளைமார்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்திலே இறங்கியது கோடாங்கி நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, எருமார்பட்டி, மானூத்து, ராஜக்காபட்டி ஆகிய கிராமங்கள். இப்போதும் அதே ஐந்து கிராமங்கள் களத்திலே இறங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் மறியலும் போராட்டமும் நடத்துகின்றன. இந்த கிராமங்களில் தேவர்கள், பிள்ளைமார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவினரோ, திமுகவினரோ, காங்கிரஸ்காரரோ யாருமில்லை.ஆனால் இந்த ஐந்து கிராமங்களிலும் தலித்களுக்கு ஆதரவாக, தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டதன் நியாயத்தை விளக்கி, வருகிற தாக்குதல்களை சந்தித்து கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி. சிகப்புத்துண்டை தோளில் போட்டபடி ஐந்து ஊர் சாவடியிலும் ஒருவன் உட்கார்ந்து மொத்த ஊருக்கும் எதிராக பொழுதெல்லாம் பேசி, தவித்து, தொண்டை அடைத்தபடி இருக்கிறான். அவனுக்குப்பின்னால், “அம்பேத்கர் பிறந்த தின விழா” என்ற பேனர் எதுவும் கட்டப்படவில்லை. அது அவனுக்குப் பொருட்டுமல்ல. இது 89 அல்ல என்று உலகுக்குச் சொல்லும் ஒரே சாட்சி அவன்தான். அந்த சாட்சி போதும், உத்தப்புரத்து தலித்துகளின் ஆதார நம்பிக்கை விண்முட்ட எழ. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வர்க்க உரமேறிய போராட்டத்தை முன்னிலும் வேகமாக நடத்த.5கட்டுரையை முடிக்கும் முன் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றுகிறது.1. 1964 கலவரத்தில் பெரும் சேதமும் உயிர்ப்பலியும் தலித்துகளுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் தளர்ந்து விடவில்லை. மீண்டு எழுந்தார்கள். மீண்டும் 1989ல் பெரும் சேதமும் நான்கு உயிர்ப்பலிகளும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து முயற்சித்தார்கள். இப்போது 2008ல் புதிய பரிணாமத்தோடு களத்திலே இறங்கி நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதீய அவமானத்தை துடைத்தெறிய கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இழப்புகளை சந்தித்த வண்ணம் போராடிக் கொண்டேயிருக்கும் உத்தப்புரத்து மக்களின் ஆணிவேர் எதுவென்று கேட்டால் அடுத்தவனை அண்டிப்பிழைக்க அவசியமில்லாத அவர்களது வாழ்நிலை. அங்கே இருக்கும் தலித்கள் பெரும்பான்மையோருக்கு சொந்தநிலம் இருக்கிறது. அவற்றை மையப்படுத்தி வாழ வழி இருக்கிறது. அதன்மேல் நின்று சுயமரியாதைக்கான போராட்டத்தை அவர்கள் விடாமல் நடத்தி வருகின்றனர்.அதே உத்தப்புரம் பஞ்சாயத்தின் துணை கிராமமான பொட்டல்பட்டியில் உள்ள தலித்துகள் இன்றுவரை வாய்திறக்க முடியவில்லை. கைக்கு எட்டும் தூரத்தில் தனது சகோதரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக முணுமுணுக்கக்கூட முடியவில்லை. ஏனென்றால் மறுநாள் காலை ஆதிக்கசக்திகளின் நிலத்தில்தான் அவர்கள் வேலைக்குப் போயாக வேண்டும். வயிறும் வாழ்வும் குடும்பமும் அவர்களை நம்பித்தான். நிலம் வாழ்வுக்கும் வயிற்றுக்கும் அடிப்படை. சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் அடிப்படை. தலித் விடுதலைக்கான மூல முழக்கம் நிலம்... நிலம்... நிலம்...2. மே 6ம் தேதி காலை 7.45 மணியளவில் தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டு தலித் பகுதியில் பாதை உருவாக்க முயற்சி செய்யப்பட்டபோது நடுவில் பெரும் கிணறு ஒன்று இருந்தது. இந்தக் கிணற்றை மூடினால் தான் பாதைபோட முடியும். அது தனியார் பட்டா நிலத்தில் உள்ள கிணறு. எனவே என்ன செய்வது என்று அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது, தோழர்கள் கே.பொன்னையா, கே.முத்து இருளன் இருவரும் அந்த இடத்தில், இந்த கணத்திலே “பொதுப்பாதைக்காக எங்கள் கிணற்றை அரசுக்கு ஒப்படைக்கிறோம்” என்று மாவட்ட கோட்டாட்சியருக்கு எழுதிக் கொடுத்தனர். அதன்பின் தான் கிணற்றை நிரப்பி பாதை போடப்பட்டது.ஆனால் பாதை அமைக்கப்பட்டவுடன் அவமானம் தாளாமல் பிள்ளைமார்கள் ஊரையேக் காலி செய்து மலையடிவாரத்திற்கு ஓடிவிட்டனர். தங்களின் உரிமைக்காக எதையும் இழக்கத் துணிகிற தலித்துகள் ஒருபக்கம். எதை இழந்தாலும் சாதியை இழக்க மாட்டோம் என்று கொக்கரிக்கிற சாதீயர்கள் ஒருபக்கம். இரண்டுக்கும் இடையில் இருக்கிறது ‘உத்தப்புரம்’, ‘தமிழகம்’, ‘இந்தியா’

-சு.வெங்கடேசன்

Thursday, July 3, 2008

உணவு எரிகிறது உயிர்கள் துடிக்கின்றன

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியானா பொலிஸ் 500 அமெரிக்கன் மோட்டர் ரேசில் ஒரு கறுப்பு இன்டி கார் வெற்றிபெற்றது. 670 குதிரை சக்தியுள்ள அந்தக்காரின் ஓட்டுநர் சொந்தக்காரர் டேரியோ ஃப்ரான்சிட்டி கூறிய ஒரு செய்தி பலரை வியப்பிலாழ்த்தியதுடன் அமெரிக்காவில் மக்காச் சோள எத்தனோல் தொழிலுக்குரிய தொடக்கமாகவும் அமைந்தது. அவர் காருக்கு டீசல், பெற்றோல் போட்டு ஓடவில்லை. ஜின் போன்ற மதுவுக்கு நிகராக நல்ல வெள்ளைக் கண்ணாடி போல் இருக்கும் மக்காச் சோள சாராயம் ஊற்றி அக்காரை ஓட்டினார். மக்காச்சோள சாராயத்தில் (எத்தனோலில்) டீசல் பெற்றோலில் உள்ளதை விட அதிக அளவு ஆக்டேன் உள்ளதால் உயிரி எரிசக்திக்கும் புதைபடிவ (Fossil) எரிசக்தியை விட ஆற்றல் அதிகம் என்ற உண்மையும் புலனாயிற்று. அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களில் வாழும் மக்களுக்கு மக்காச் சோளம் மனித உணவு. ஏனைய பல இதர நாடுகளில் மக்காச் சோளம் கால்நடைத் தீவனம். மக்காச் சோள எத்தனோலின் ஆற்றல் காரணமாக இந்த உணவை எரித்து அதை எரிசக்தியாகப் பயன்படுத்துவதால் குறிப்பாக ஆபிரிக்காவில் பட்டினிச்சாவு தொடங்கிவிட்டது. மனித உயிர்களும் கால்நடை உயிர்களும் துடித்தாலும் கூட உணவையே எரிசக்தியாக மாற்றிக் காரோட்டும் அமெரிக்க சுகவாசிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. 2005 இல் வெளிவந்த மின்னசோட்டாப் பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் கணக்கை வைத்து இன்று அமெரிக்காவில் மொத்த விளைச்சலில் 20 சதவீத மக்காச் சோள உணவு சாராயமாக மாற்றப்பட்டுப் புதை படிவ எரிசக்திக்குரிய மாற்றாகிவிடட்து. 2005 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா 4 பில்லியன் கலன் உணவுச் சாராயம் உற்பத்தி செய்துள்ளது. இந்த 4 பில்லியன் கலன் மக்காச் சோள சாராயம் அமெரிக்காவின் மொத்த மக்காச் சோள உற்பத்தியில் 15 சதவீதம் . ஆனால், இந்த அளவு இருந்தும் இந்த உணவுச் சாராயம் மரபு பழி பெற்றோல், டீசல் நுகர்வை 2 சதவீதம் மட்டுமே குறைக்கிறதாம். அதேசமயம் மக்காச் சோள உணவுச் சாராயத்தினால் மரபுவழி புதை படிவ எரிசக்தியை விட 25 சதவீதம் கூடுதல் ஆற்றல் பெறமுடிகிறது. அதற்கு ஏற்ப கார் எஞ்சின்களும் திருத்தி அமைக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதால் பசுமையக நச்சுப்புகை (கரியமிலவாயு) 12 சதவீதம் குறைகிறதாம். எனவே, சுற்றுச்சூழலை ஒரு காரணமாகக் காட்டி இப்படி நன்மையுள்ள ஒரு அம்சத்தை மட்டும் பலூனாக ஊதவைத்து அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆதரவுடன் எரிபொருளாகப் பயன்படுத்தும் மக்காச் சோள சாகுபடிக்கு மானியம் அள்ளிவிடப்படுகிறது. இது இந்தியாவையும் சேர்த்துப் பல்வேறு வளர்முக நாடுகளின் உணவு உற்பத்தியைப் பல்வேறு விதமாகக் கட்டுப்படுத்துவதும் கண்கூடு. ஆபிரிக்கா மட்டுமல்லாமல் மக்காச் சோ ளம் சாகுபடி செய்யும் அனைத்து உலகநாடுகளும் , இந்தியாவும் அமெரிக்காவுக்கு மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்கின்றன. மக்காச் சோள உணவுச் சாராயம் தயாரிக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் மட்டுமே உண்டு. உலகளாவிய மக்காச் சோள கொள்முதல் திட்டத்தை அமெரிக்கா கடைப்பிடிப்பதால் தமிழ்நாட்டு விவசாயிகள் கூடப் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டு விவசாயம் எப்படியெல்லாம் தாறுமாறாகத் தடுமாறுகிறது என்பதை யார் அறிவாரோ? இன்று தமிழ்நாட்டில் தண்ணீர் வளமுள்ள பகுதிகளில் மக்காச் சோள சாகுபடி மேலோங்கியுள்ளது. நெல்லை விடவும் கோதுமையை விடவும் மக்காச் சோள சாகுபடியே இன்று இலாபகரமாகியுள்ளது. இதன் ஏற்றுமதித் தேவை உயர்ந்துவிட்டது. இன்று தஞ்சை மாவட்டத்தில் நெல் வயல்கள் எல்லாம் மக்காச் சோள வயல்களாகி விட்டன. அமெரிக்காவிலும் பாதிப்புகள் உண்டு. அங்குள்ள விவசாயிகளும் மக்காச் சோள சாகுபடியால் கொழுத்த இலாபம் பெறுகின்றனர். குறிப்பாக நில முதலைகளாகவும் திகழும் கார்கில், ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லாண்ட் பெறும் ஆதாயங்களுக்கு அளவே இல்லை. மக்காச் சோள உணவுச் சாராயத் தொழிற்சாலைகளில் 70 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ள தொழில் அசுரர்களான வெர்ஜின், அட்லாண்டிக்கைச் சேர்ந்த ரிச்சர்டு பிரான்ஸன், சன்மைக்ரோ சிஸ்டத்தின் வினோத்கோஸ்லா இருவருமே அமெரிக்கா வழங்கவுள்ள மக்காச் சோள மானியங்களை உண்ணத் தயாராகிவிட்டனர். மக்காச் சோள சாராய (எத்தனோல்) ஆராய்ச்சிக்கு 200 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்காச் சோளத்தில் இரண்டு வகை உண்டு. மக்காச் சோளத்தை முதன்மை உணவாக (Staple Food) ஏற்றுள்ள நாடுகளில் வெள்ளை வகை மக்காச் சோளம் மனித உணவாகவும், மஞ்சள் வகை கால்நடை உணவாகவும் உண்ணப்படுகின்றன. இந்தியாவில் அந்த வேற்றுமை இல்லை. மஞ்சள் மக்காச்சோள மாவை ரொட்டி செய்து உண்ணும் மரபு இங்குண்டு. அப்படி உண்போர் இந்தியாவில் மிகக் குறைவு. ஏனெனில் நமது முதன்மை உணவு அரிசியும் கோதுமையும் ஆகும். நல்ல விலை காரணமாக மக்காச் சோளம் விளையும் மெச்சிக்கோ மற்றும் ஆபிரிக்கா , தென்னமெரிக்க நாடுகளில் வெள்ளை ரக சாகுபடி குறைந்து மஞ்சள் மக்காச்சோள சாகுபடி கூடியதால் பலர் பட்டினியால் மடிந்து போகிறார்கள். எத்தனோல் சாராய உற்பத்திக்கு மஞ்சள் ரகம் பயனாவதால் அமெரிக்க அதிபர் புஷ் ""இதனால் மனித உணவுக்கு ஆபத்தில்லை' என்று திருவாய் மலர்ந்துள்ளார். நம்மையெல்லாம் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார். அதுவும் நடக்கலாம். எதிர்கால இந்தியாவில் விவசாயிகள் நெல், கோதுமையை மறந்து மக்காச் சோளத்தை மட்டுமே சாகுபடி செய்து அமெரிக்காவின் ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறார்கள். அப்போது உணவுப் பழக்கம் மாறலாம். தினம் இரண்டு மக்காச் சோள ரொட்டியும், இரண்டு பெக் அதாவது குவார்ட்டர் மக்காச் சோள சாராயமும் இந்திய ரேஷன் கடைகளில் கிட்டும். இந்தியாவை விடுங்கள். அமெரிக்காவிலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டு அதன் தாக்கம் உலக நாடுகளில் நல்வாழ்வையும் சூழல் வாழ்வையும் பாதிக்கலாம். மின்னசோட்டாவில் தொடங்கி மியாமிக்கு அருகே சங்கமிக்கும் மாபெரும் மிசூரி மிஸிசிப்பி நதியைப் போல் அமெரிக்காவில் மக்காச்சோள சாராயம் ஆறாக ஓடுகிறது. "இதுதான் கார்பன் கட்டுப்பாடு இதுதான் சூழல் நேர்த்தி' என்று பீற்றிக்கொள்ள முடியாது இது பிதற்றல்தான். அமெரிக்காவில் மக்காச் சோள சாராயத் தொழிற்சாலைகள் உள்ள நெப்ராஸ்கா, வாகு போன்ற சிறு ஊர்களை நகரங்களாக்கியுள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்கு கொள்ளை இலாபம் உண்டு. மக்காச் சோள சாராய வடிவாலைகள் பற்றி அமெரிக்கப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ரோஜர்ஸ் ஹார்டர்ஸ் என்ற விவசாயி "நான் மக்காச்சோளம், கோதுமை சாகுபடியுடன் பால்பண்ணைத் தொழிலும் செய்கிறேன். மக்காச் சோள சாகுபடியில் கிட்டும் இலாபம் வேறுபயிர்களில் இல்லை. நான் மக்காச் சோள சாகுபடியிலே மட்டும் கவனம் செலுத்துவதாயுள்ளேன். பால் பண்ணையை விற்றுவிடப் போகிறேன்'. இது ஒரு மாதிரிதான். இப்பகுதி விவசாயம் இனி உணவையோ , கால்நடைத் தீவனத்தையோ நம்பப் போவதில்லை. காரோட்டக்கூடிய சாராயத்தை நம்பப்போகிறது . இது எவ்வளவு பெரிய சீரழிவு? தீவனத் தட்டுப்பாட்டால் கால்நடைகள் இறைச்சிக்குச் செல்வதும் கூடவே உணவுத் தட்டுப்பாடும் பெருகி கால்நடை உயிர்களும் மனித உயிர்களும் துடிக்கப் போகின்றன. உணவைப் புளிக்கவைத்து உணவில் உள்ள மாப்பொருட்களைச் சர்க்கரையாக மாற்றிப் புளிகலனில் மாறிய சர்க்கரைப் பொருளை ஈஸ்ட்கள் மூலம் சாராயமாக்கிக் காய்ச்சி வடிக்கப் போகிறார்கள். உணவு கலோரி சக்தியாக மாறி உயிர்களை வாழவைக்காமல் எரிசக்தியாக மாற்றிப் பெற்றோலுடன் கலந்து காரோட்டப் போகும் இத்திட்டம் இன்னும் இரண்டே ஆண்டுகளில் விரிவாக்கம் செய்ய பில்லியன் மில்லியன், டொலர் அளவில் மானியங்களை அமெரிக்க செனட் செலவிடப் போகிறது. ஆராய்ச்சிக்கு மட்டும் 200 மில்லியன் டொலரை புஷ் ஒதுக்கியுள்ளார். அமெரிக்காவிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மக்காச்சோள சாராய வடிவாலைகளுக்கு அனல் மின்சாரம் வேண்டும். அது மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு ஆற்றல் (ஃபாசில் எனர்ஜி) அல்லவா? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு குழாய்த்தடம் வேண்டும். அதற்கும் புதைவு ஆற்றல் வேண்டும். பல இலட்சக்கணக்கான தரிசுநிலம், வனப்பகுதிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறப்போகிறது . வனப்பகுதி பாதிக்கப்பட்டால் அதுவே பசுமையக கார்பன் நச்சுப்புகைகளை ஓசோன் மண்டலத்திற்கு அனுப்பி ஒட்சிசன் உற்பத்தியைக் குறைத்துவிடுமே. மூன்றாவதாக நிலத்தில் யூரியாவைக் கொட்டி விரிந்த அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்தால் அந்த நிலங்களிலிருந்து வெளியேறும் நைட்ரிக் ஒட்சைட்களினாலும் ஓசோனுக்கு ஆபத்து உள்ளதே. விவசாயம் உணவு உற்பத்தியை மையமிட்டு உணவை உயிர்வாழப் பயன்படுத்தாமல் உணவையே எரிபொருளாக்கும் அமெரிக்காவின் திட்டம் விரைவில் வளர்முக நாடுகளைப் பஞ்சப் பிரதேசமாக மாற்றும் திட்டமாகவும் செயல்படக்கூடியது. தமிழ்நாட்டில் இது தொடங்கிவிட்டதைக் கவனிக்கலாம். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எங்கு நோக்கினும் மக்காச் சோள பசுமையே அதிகம் தென்படுகிறது. தூத்துக்குடித்துறை முகத்திலிருந்து மக்காச் சோளம் ஏற்றுமதியாகிறது. அமெரிக்கா உணவையே சாராயமாக்கும் போது நாம் ஏன் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் விட்டு வைத்துள்ளோம் என்று புரியவில்லை. கள் இறக்க அனுமதி இல்லை. பதநீர் இறக்குவதைக் கூடத் தடை செய்கின்றனர். அதேசமயம் கள்ளச்சாராயம் குடித்து மனிதர்கள் பலியாவதும் அதிகரித்துக் கொண்டு போகிறது.குறைந்த போதையுள்ள பியர் விற்கப்படுவது போல் உகந்த முறையில் பேக் செய்து உயர்வான முறையில் கலப்படமில்லாத கள் உற்பத்தியில் சாராய சாம்ராஜ்யங்களைக் களமிறங்கவிடலாமே. உணவை எரிபொருளாக மாற்றுவதை விட இன்று உண்ணா எண்ணெயாக மாறிவிட்ட தேங்காய் எண்ணெயை பயோடீசலாக மாற்றும் திட்டம் தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாயிருக்கும் . காட்டாமணக்கு மானியத்தைத் தென்னைக்கு வழங்கலாம். தேங்கியுள்ள தேங்காய்ச் சந்தைக்கு விடிவு வரவில்லை. அமெரிக்காவில் உணவைச் சாராயமாக மாற்றுவதில் எவ்வித தயக்கமும் காட்டாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் "கள் இறக்கத் தடை ' என்ற நிலை?

ஆர்.எஸ்.நாராயணன்(கட்டுரையாளர் : இயற்கை வேளாண்மை பொருளியல் நிபுணர்) தினமணி

Labels:

தமிழகத்தில் மாற்று அணி ; காலத்தின் கட்டாயம்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம்முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிச்சொல்லுக்கும் பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக் கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும் குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியில் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை.மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்சினையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக்கொண்டதில்லை.1967 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.1967 ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும் மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.1971 ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரஸுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி. காங்கிரஸுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா கருணாநிதி கூட்டு உருவானது.ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976 ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க "சர்க்காரியா கமிஷனை' இந்திரா அமைத்தார்.1977 ஆம் ஆண்டு காங்கிரஸை எதிர்க்க ஜனதாக் கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.1978 ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை. ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது.1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரஸுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். ""நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!' என முழங்கினார்.1984 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது.1991 இல் காங்கிரஸுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.1998 இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.1999 இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003 ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979 இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள்.1989 இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.1999 ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.டில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன.ஆனால், மத்திய ஆட்சிகளில் அங்கம்வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்சினைகள், சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.தமிழ் நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும், தனது ஏதேச்சதிகாரப் போக்கை அது கைவிட மறுக்கிறது.உள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.இரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.இரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விட்டப்பட்டது. மோதல்ச் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.இரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி, மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.எல்லையற்ற ஊழலும் வஞ்சமும் நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.தி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.முக்கியமான பிரச்சினைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது. அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிறகட்சித் தலைவர்களை முதலமைச்சரும் அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள்.கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழகத் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது. ஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன. 1967 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால், தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன.தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.அ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முள் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்சினைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய்ப் பிரச்சினையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும் பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

தினமணி

Labels:

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பெர்லின் சுவர் போல் அண்மையில் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். சமூகப் பதட்டத்தை ஏற்படுத்திய இப்பிμச்சினை குறித்து மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் மேரி, தோழர் இராசு ஆகியோர் நேரில் சென்று களஆய்வு செய்தனர். அவர்கள் அளிக்கும் சுருக்கமான அறிக்கை இது.
மதுணிμ மாவட்டம் -பேணிμயூர் வட்டம் சேடப்பட்டி ஊμணிட்சி ஒன்றியத்தில் உள்ளது உத்தப்புμம் ஊμணிட்சி. இந்த உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் ஆறு கிμணிமங்கள் அடக்கம். உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் பிள்ளைமார் சமூகம் 700 குடும்பங்கள், பள்ளர் சமூகம் 580 குடும்பங்கள், மூப்பர் சமூகம் 150 குடும்பங்கள் நாவிதர் சமூகம் 5 குடும்பங்கள், வண்ணார் சமூகம் 3 குடும்பங்கள், பிμமலைக்கள்ளர் சமூகம் 10குடும்பங்கள், ஆசாரி குடும்பம் 2 மற்றும் பொட்டல்பட்டி கிμணிமத்தில் பறையர் சமூகம் 170 குடும்பங்கள், கீழப்பட்டி கிμணிமத்தில் சக்கிலியர் சமூகம் 50 குடும்பங்கள்,கவுண்டன்பட்டி கிμணிமத்தில் கவுண்டர் சமூகம் 180 குடும்பங்கள், தச்சம்பட்டி கிμணிமத்தில் நாயக்கர் சமூகம் 50 குடும்பங்கள் உள்ளன. இந்த உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் மக்கள் தொகை ஏறக்குறைய 11,240 ஆகும்.

கடந்த 1989ஆம் ஆண்டில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பள்ளர் சமூகத்தில் ஐவரும் பிள்ளைமார் சமூகத்தில் ஒருவரும் ஆக ஆறுபேர் கொல்லப்பட்டனர். அப்போதைய அμசு இறந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 வீதம்வழங்கி தனது கடமையை முடித்துக் கொண்டது. இந்த சாதிய மோதலுக்குப் பின்தாழ்த்தப்பட்டோருக்கென அவர்கள் குடியிருப்பில் தனியாக தொடக்கப்பள்ளி ஒன்று அμசால் தொடங்கப்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் தனித்தனியாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. அதன் பிறகு இரு சமூகத்தினரிடையே நடந்த தொடர் பிμச்சினைகளின் கணிμணமாக பிள்ளைமார் சமூகத்தின் சார்பில்நிதி திμட்டப்பட்டு 21.84மீட்டர் நீளத்திற்கு இரு பிரிவினரின் குடியிருப்புகளை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பள்ளர் சமூகத்தினர் சாமி கும்பிடுவதில் வந்த மோதலைத் தொடர்ந்து பிள்ளைமார் அந்த சுவரில் மின்கம்பிகளை பொருத்தி மின்சணிμமும் பாய்ச்சி உள்ளனர். அதில் ஒரு மாடு, பல கோழிகள் இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிμச்சினை சட்டப்பேμணிஅ‹ல் பேசப்பட்டு மேற்கண்ட சுவரில் 6 மீட்டர் நீளத்திற்கு சுவர் இடிக்கப் பட்டுள்ளது. பின்பு நடந்த உண்ணணிஅμதம் அμசியல் கட்சிகளின்தலையீடு, தகவல் தொடர்பு சாதனங்களின் பிμச்சணிμம் இவைகள் நாம் அறிந்ததே. இந்த நிலமையில் இருசணிμணிரும் அμசிடம் தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

பிள்ளைமார் சமூகத்தினரின் முத்தாலம்மன் கோவிலைச் சுற்றியுள்ள இடத்திற்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கை அμசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆவன செய்து தருவதாக உத்திμஅணிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சுஅணிμ பெணிOத்தஅணிμஇரு பிரிவினருக்கும் பாதகம் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். பள்ளர் சமூகத்தினர் தங்கள் தμப்பு கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என ஆதங்கப்பட்டனர்.
அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு
- தீண்டாமை சுவர் முழுவதும் அகற்றப்பட வேண்டும்.
- பேருந்து நிறுத்தத்தில் நிழற்கொடை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- ஊருக்குள் இருக்கும் புறம்போக்கு ஆக்கிμமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
- பிற்படுத்தப்பட்டோரின் குடியிருப்பு களிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பகுதிக்குள் வரும் சாக்கடையை மாற்றி அமைக்க வேண்டும்.
- 1989க்கு முன் சாமி குடும்பிடுவதற்கு எங்களுக்கு இருந்த உரிமை மீண்டும் வேண்டும்.
இக்கோரிக்கைகள் குறித்து பிள்ளைமார் சமூகத் தலைவர்- முன்னாள் கிμணிம நிர்வாக அலுவலர் சேதுப்பிள்ளை என்பவரிடம் கருத்துக்கேட்டோம். நிழற்குடை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமைக்கக் கூடாது என்றும் சாலை இருப்பதே 15 அடி அகலம்தான் என்பதால் பேருந்து அஅμஅர் வீட்டருகேயே நிற்கும். நிழற்குடை தேவையில்லை என்றும் கூறினார். தாழ்த்தப்பட்டவர்கள் நிழற்குடையில் அமர்ந்துவிடுவார்கள் என்ற சாதிய மேலாதிக்க எண்ணமே இந்த எதிர்ப்புக்குக் கணிμணணிமன்று புரிந்து கொள்ள முடிந்தது. பிள்ளைமார் பகுதியின் கழிப்பிடத்திலிருந்து மனித மலங்கள் குளத்திற்குச் சென்று அதில் ஏற்படும் கசிவுதாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் கிணற்றைப் பாழாக்குகிறது என்பதுதான் சாக்கடை குறித்த தாழ்த்தப்பட்டோர் கோரிக்கைக்கு அடிப்படை. இது குறித்து சேதுப்பிள்ளைமவுனத்தையே பதிலாக அளித்தார். தாழ்த்தப்பட்டோரின் நியாயமான கோரிக்கையைநிறைவேற்றி உரிய அளவுக்கு அப்பகுதியில் பாதுகாப்பை உத்தμஅணிதப்படுத்தி அங்கு பதட்டம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அμசின் .

வேங்கையே ! வாடா வெளியில் வா ஓங்கிவீசு நீ புயலாக வீசு ! தீங்கு செய்
கொடியர் தமிங்கிலார் தீட்டும்திட்டங்கள் துகள்படச் செய்யவாய் !
- காசி ஆனந்தன்

Tuesday, July 1, 2008



தலைவன்உருவாக்கப்படுவதில்லைஏனெனில்அவன் செயற்கைபொருளல்ல...!தலைவர்கள்பிறப்பெடுப்பதில்லைகாரணம்கருவறை என்றசிறுவறைக்குள் இவர்களைஉள்ளடக்க முடியாது
தலைவர்கள்அவதரிக்கிறார்கள்....!

உலகில்எங்கே மனிதர்கள்அடிமைகளாக்கப்படுகிறார்களோஅங்கு மட்டும்தான்வித்தியாசமானஅபூர்வமான மனிதர்கள்அவதரிக்கிறார்கள்...!

இந்த உலகில்மக்களுக்காக அழுபவன்மக்களுக்காகவே வாழ்பவன்மக்களுக்காகவே நடப்பவன்அவனால் மட்டுமேமௌனத்தின் சத்தத்தையும்சாதனைகளாக படைக்கமுடியும்...!

தொலைந்துபோனதேவேந்திரர் விடுதலையைதூசிதட்டிக்கொண்டுவந்துகுனிந்துநின்ற தேவேந்திரர்களை
நிமிரவைத்துப்பார்த்தவன்நீதானே...!
ஆகையினால்வணங்குகிறேன்...!!!